Saturday 4 August 2018

அங்கை நீட்டி - திருச்சிராப்பள்ளி

இன்று ஆடி மாதம் கிருத்திகை நக்ஷத்ரம். முருகனுக்கு விசேஷமான நாள். திருச்சிராப்பள்ளி தலத்து முருகன் மீது, அருணகிரிநாதர் பாடிய மற்றொரு திருப்புகழைப் பார்ப்போம்.

இந்தப் பாடலிலும் முதற் பகுதியில் சிருங்காரம் மிகுந்து வருவதால், இரண்டாம் பகுதியிலிருந்து பாடியுள்ளேன். இதற்கு ஒலி வடிவம் கௌமாரம் தளத்தில் எதுவும் தரவில்லை. ஆதலால், முருகன் அருளாலும், திருப்புகழ் கற்ற பெரியவர் ஒருவரிடம் பெற்ற ஆலோசனையினாலும், இரண்டாம் பகுதியை மட்டும் பாடி, பதிவு செய்துள்ளேன்.

முழுப்பாடலையும் வேண்டுபவர் இங்கே படிக்கலாம்:
http://kaumaram.com/thiru/nnt0547_u.html

ராகம் - ரீதிகௌளை
தாளம் - அங்க தாளம் (7.5 அக்ஷரம்) - தகிட தகதிமி தகதிமி தகதிமி

தந்த தாத்தன தத்தத் தானன
.தந்த தாத்தன தத்தத் தானன
..தந்த தாத்தன தத்தத் தானன தனதான

எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன
.அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்
..இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் முடிவேறாய்

இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக
.மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத
..மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல வயலூரா

செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
.வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்
..தின்று கூத்துந டிக்கத் தோகையில் வரும்வீரா

செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
.மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
..தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் பெருமாளே.

(பார்வதி) பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ அருள்வாயே

விளக்கம்:

முருகப் பெருமானின் சிறப்புகளைத் தெரிவிக்கும் அழகிய வரிகள்:

1. எங்குமாய் - எல்லா இடத்திலும் நிறைந்தவன்
2. குறைவற்று - குறை இல்லாதவன்
3. சேதன அங்கமாய் - அறிவே வடிவானவன்
4. பரிசுத்தத்தோர் பெறும் இன்பமாய் - தூய மனம் கொண்ட அன்பர்கள் அடையும் இன்ப வடிவினன்
5. புகழ் - புகழ் வாய்ந்தவன்
6. முப்பத்தாறினின் முடிவேறாய் - 36 தத்துவங்களுக்கும் அப்பால் நிற்பவன்
7. இந்த்ர கோட்டி மயக்கத்தான் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்துத் தாமதமின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல - இந்திரனின் கோஷ்டிகள் (கோட்டிகள்) யாவரும் ஒன்று கூடி, சிறந்த மந்திரத்தால் பூஜை செய்ய, அவர்கள் முன் உடனே வந்து, சொர்க்கத்தைக் காத்துக்கொடுத்தவன்
8. வயலூரா - வயலூரின் தெய்வம்
9. செங்கை வேற்கொடு துட்டச் சூரனை வென்று - தன் சிவந்த கையில் வேல் ஏந்தி, தீய அரக்கர்களை வென்றவன்
10. தோல் பறை கொட்ட, கூளிகள் தின்று, கூத்து நடிக்க, தோகையில் வரும்வீரா - அந்தப் போர்களத்தில் வெற்றி கண்டதால், தோலினால் ஆன பறை வாத்தியங்கள் கொட்ட,
அசுரர்களின் பிணத்தை, பேய்கள் உண்டு, மகிழ்ச்சியில் நடனம் ஆட, கம்பீரமாக மயிலின் மீது ஏறி வரும் வீரன்

இதற்குப் பின், திருச்சிராப்பள்ளி ஸ்தல சிறப்பினைப் பாடுகிறார்.

செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
.மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
..தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் பெருமாளே.

செம்பொ(ன்)னால் திகழ் சித்ரக் கோபுர(ம்)
.மஞ்சு இராப்பகல் மெத்தச் சூழ்தரு
..தென்சிராப்பள்ளி வெற்பு

அதாவது, தூய பொன்னிறமான, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கோபுரம் உடையதும், மஞ்சு (மேகம்) எப்போதும் இரவும் பகலும் சூழ்ந்து காணப்படுவதுமான (உயர்ந்த இடத்தில் உள்ள கோயில்), தென் திசையில் உள்ள, திருச்சிராப்பள்ளி மலை.

இந்த மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே என்று பாடுகிறார்.

வேண்டுதலாக கேட்பது - பார்வதி பங்கர் (சிவ பெருமான்) போற்றிய தாமரைப் பாதத்தை, நானும் போற்ற எனக்கு அருள வேண்டும்.

பார்வதி பங்கர் போற்றிய பதம்த் தாளை நாமும் போற்றுவோமாக.

பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=1DwuMKe5QB1pnAUsWwE87oxF6c1WFuMKA

1 comment: