Showing posts with label valli kalyanam. Show all posts
Showing posts with label valli kalyanam. Show all posts

Thursday, 19 October 2017

கைத்தல நிறைகனி - விநாயகர்

ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன .... தனதான

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.

பதம் பிரித்து:

கைத்தல நிறை கனி, அப்பமொடு அவல், பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ! கற்பகம் என வினை கடிது ஏகும்
[கடிது - விரைந்து; ஏகும் - அழியும், போகும்;]
கைகள் நிறைய பழங்கள், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை உண்ணக்கூடிய யானையின் முகம் கொண்ட பெருமானின் திருவடிகளை விரும்பிப் போற்றும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் அடியவரின் சிந்தையில் உறையும் பரம்பொருளே! கற்பகத் தருவே! என்று விநாயகப் பெருமானைத் துதி செய்தால், வினைகள் யாவும் விரைவாய் நீங்கும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்;
[மத்தம் = ஊமத்தம் பூ; மதியம் - நிலா]
ஊமத்தம் பூ, நிலா ஆகியவற்றை வைத்திருக்கும் சிவபெருமானின் மகன்
மற்பொரு திரள் புய; மதயானை;
மல் யுத்தத்திற்குத் தகுந்த விரிந்த தோள்களை உடையவன். மதயானையை ஒத்தவன்.
மத்தள வயிறனை
மத்தளம் போல் பெருவயிறு உடையவன்.
உத்தமி புதல்வனை
உத்தமியான பார்வதியின் குமாரன். [இங்கு பார்வதி மஞ்சளை வைத்து ஒரு பிள்ளையைப் பிடித்துவைத்து, அதற்கு உயிரூட்டிய நிகழ்வு சொல்லப் படுகிறது]
மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே [மட்டு - தேன்; கொடு - கொண்டு]
இப்படிப்பட்டவனை, தேன் நிறைந்த மலர் கொண்டு பணிவேன்.

முத்தமிழ் அடைவினை, முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முத்தமிழான இயல், இசை, நாடகம் ஆகியவற்றின் முறைமையை, மேரு மலையில் (முற்படு கிரி - முதன்மையான மலை) அமர்ந்து எழுதியவனே!
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா
திரிபுர சம்ஹாரத்தின் போது, இவரை (விநாயகரை) வணங்காமல் சிவன் சென்றதால், முதலில் அவரது ரதத்தின் அச்சாணியைப் பொடி செய்த அதி தீரன்.

அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதன் இடை இபமாகி [இபம் - யானை]
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே
காதலினால் மிகு துயர்க்கொண்ட முருகனுக்காக, வனத்தில் யானை உருக்கொண்டு வள்ளியை மிரட்டி, முருகனுக்கு அந்த வள்ளியை மணம்முடித்து வைத்து, அருள்செய்த பெருமானே!

Monday, 18 September 2017

உம்பர்தருத் தேனுமணி

ராகம் - ஹம்ஸத்வனி
தாளம் - அங்க தாளம் (5 5 6) [2 தடவை கண்டசாபு தாளம், 1 தடவை ரூபக தாளம்]

தகதகிட தகதகிட தகதகதிமி

தந்ததனத் தானதனத் தனதான

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
..ஒண்கடலிற் றேனமுதத்  துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
..என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
..தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
..ஐந்துகரத் தானைமுகப் பெருமானே

பதம் பிரித்து:

உம்பர்தருத் தேனு மணிக் கசிவாகி
..ஒண்கடலில் தேன் அமுதத்து உணர்வு ஊறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
..என்றன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே
தம்பி தனக்காக வனத்து அணைவோனே
..தந்தை வலத்தால் அருள் கைக்கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
..ஐந்து கரத்து ஆனை முகப் பெருமானே

உம்பர்தரு - தேவலோக மரம் - கற்பக வ்ருக்ஷம்
தேனு - தேவலோகப் பசு - காமதேனு
மணி - உயர்ந்த சிந்தாமணி

இவை மூன்றுமே நாம் என்ன கேட்கிறோமோ அவற்றை நமக்குத் தந்துவிடும்.

கற்பக வ்ருக்ஷம் அதன் இடத்திலேயேதான் இருக்கும். நாம் தான் அதனிடம் சென்று கேட்கவேண்டும்.

காமதேனுவை, நமக்கு உயர்ந்த வரம் இருந்தால், எங்கு வேண்டுமானாலும்  அதனை அழைத்துச் செல்லலாம். நம்மிடத்திலே வந்து, நமக்கு வேண்டுவனவற்றைக் கொடுக்கும்.

சிந்தாமணி என்பது, உயர்ந்த மணி. நாம் அதனிடம் கேட்க, மணி அவ்விடத்தில் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிந்தாமணியை மனதளவில் நினைத்துக்கொண்டு கேட்டாலோ அல்லது நினைத்தால் மட்டுமோ போதும். உடனே தந்துவிடும்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், அம்பாள், உயர்ந்த சிந்தாமணிகள் நிறைந்த க்ருஹத்தில் அமர்ந்திருக்கிறாள் (சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா) என்று போற்றுகிறது.

சௌந்தர்ய லஹரியில், ஸ்ரீ ஆதி சங்கரர், அம்பாளை "சிந்தாமணி குணநிகா" என்று பாடுகிறார். சிந்தாமணிக் குவியல் என்று பாடுகிறார்.

ஒரே ஒரு சிந்தாமணி கல்லே, கேட்பதைத் தந்துவிடும் என்றால், பல கற்கள் நிறைந்த குவியல் அம்பாள் என்றால், எவ்வளவு நமக்குத் தருவாள்?

அம்பாளைக் கற்பகவ்ருக்ஷம், காமதேனு, சிந்தாமணி என்றெல்லாம் பெரியோர்கள் போற்றி மகிழ்கின்றனர்.

நவராத்திரி தொடங்க இருக்கும் இத்தருவாயில், அம்பாளை வேண்டி அதிக வரம் பெற்று, உலகம் உய்ய ப்ரார்த்திப்போம்.

அம்பிகையை சரணடைந்தால் அதிகவரம் நாம் பெறலாம் என்று பாடினார் மஹாகவி பாரதியார்.

அம்பிகையின் புதல்வனான ஆனைமுகனை, அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்.

1. கற்பகவ்ருக்ஷம், காமதேனு, சிந்தாமணி இவற்றைப் போன்ற கருணை, நம் உள்ளத்தில் தோன்ற வேண்டும்.

2. ஒளி வீசும் பாற்கடலில் தோன்றிய அமுதம் போல், இனிமை நம் உள்ளத்தில் நிறைய வேண்டும்.

3. உள்ளத்தில் தோன்றிய அந்த இனிமையை, நாம் பல காலமும்  பருக வேண்டும்.

4. இவ்வாறெல்லாம் நடக்க, நம் மேல் ஆதரவு காட்டி அருளவேண்டும் விநாயகப் பெருமானே

5. தம்பி (முருகன்) அவன், வள்ளியை மணம் செய்துகொள்ள, அந்த திணை வனத்தில் யானையாக வந்து உதவியவனே

6. தந்தையான சிவபெருமானை வலம் வந்து, மாங்கனியைப் பெற்றவனே, அந்தக் கனியைக் கையில் வைத்துள்ளவனே.

7. வணங்கும் அடியார்களுக்கான முக்திப் பொருளே

8. ஐந்து கரங்கள் கொண்ட யானை முகப் பெருமானே

இந்தப் பாடலில் விநாயகப் பெருமானின் இரண்டு லீலைகள் பாடப்பட்டுள்ளது.