Monday 18 September 2017

உம்பர்தருத் தேனுமணி

ராகம் - ஹம்ஸத்வனி
தாளம் - அங்க தாளம் (5 5 6) [2 தடவை கண்டசாபு தாளம், 1 தடவை ரூபக தாளம்]

தகதகிட தகதகிட தகதகதிமி

தந்ததனத் தானதனத் தனதான

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
..ஒண்கடலிற் றேனமுதத்  துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
..என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
..தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
..ஐந்துகரத் தானைமுகப் பெருமானே

பதம் பிரித்து:

உம்பர்தருத் தேனு மணிக் கசிவாகி
..ஒண்கடலில் தேன் அமுதத்து உணர்வு ஊறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
..என்றன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே
தம்பி தனக்காக வனத்து அணைவோனே
..தந்தை வலத்தால் அருள் கைக்கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
..ஐந்து கரத்து ஆனை முகப் பெருமானே

உம்பர்தரு - தேவலோக மரம் - கற்பக வ்ருக்ஷம்
தேனு - தேவலோகப் பசு - காமதேனு
மணி - உயர்ந்த சிந்தாமணி

இவை மூன்றுமே நாம் என்ன கேட்கிறோமோ அவற்றை நமக்குத் தந்துவிடும்.

கற்பக வ்ருக்ஷம் அதன் இடத்திலேயேதான் இருக்கும். நாம் தான் அதனிடம் சென்று கேட்கவேண்டும்.

காமதேனுவை, நமக்கு உயர்ந்த வரம் இருந்தால், எங்கு வேண்டுமானாலும்  அதனை அழைத்துச் செல்லலாம். நம்மிடத்திலே வந்து, நமக்கு வேண்டுவனவற்றைக் கொடுக்கும்.

சிந்தாமணி என்பது, உயர்ந்த மணி. நாம் அதனிடம் கேட்க, மணி அவ்விடத்தில் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிந்தாமணியை மனதளவில் நினைத்துக்கொண்டு கேட்டாலோ அல்லது நினைத்தால் மட்டுமோ போதும். உடனே தந்துவிடும்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், அம்பாள், உயர்ந்த சிந்தாமணிகள் நிறைந்த க்ருஹத்தில் அமர்ந்திருக்கிறாள் (சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா) என்று போற்றுகிறது.

சௌந்தர்ய லஹரியில், ஸ்ரீ ஆதி சங்கரர், அம்பாளை "சிந்தாமணி குணநிகா" என்று பாடுகிறார். சிந்தாமணிக் குவியல் என்று பாடுகிறார்.

ஒரே ஒரு சிந்தாமணி கல்லே, கேட்பதைத் தந்துவிடும் என்றால், பல கற்கள் நிறைந்த குவியல் அம்பாள் என்றால், எவ்வளவு நமக்குத் தருவாள்?

அம்பாளைக் கற்பகவ்ருக்ஷம், காமதேனு, சிந்தாமணி என்றெல்லாம் பெரியோர்கள் போற்றி மகிழ்கின்றனர்.

நவராத்திரி தொடங்க இருக்கும் இத்தருவாயில், அம்பாளை வேண்டி அதிக வரம் பெற்று, உலகம் உய்ய ப்ரார்த்திப்போம்.

அம்பிகையை சரணடைந்தால் அதிகவரம் நாம் பெறலாம் என்று பாடினார் மஹாகவி பாரதியார்.

அம்பிகையின் புதல்வனான ஆனைமுகனை, அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்.

1. கற்பகவ்ருக்ஷம், காமதேனு, சிந்தாமணி இவற்றைப் போன்ற கருணை, நம் உள்ளத்தில் தோன்ற வேண்டும்.

2. ஒளி வீசும் பாற்கடலில் தோன்றிய அமுதம் போல், இனிமை நம் உள்ளத்தில் நிறைய வேண்டும்.

3. உள்ளத்தில் தோன்றிய அந்த இனிமையை, நாம் பல காலமும்  பருக வேண்டும்.

4. இவ்வாறெல்லாம் நடக்க, நம் மேல் ஆதரவு காட்டி அருளவேண்டும் விநாயகப் பெருமானே

5. தம்பி (முருகன்) அவன், வள்ளியை மணம் செய்துகொள்ள, அந்த திணை வனத்தில் யானையாக வந்து உதவியவனே

6. தந்தையான சிவபெருமானை வலம் வந்து, மாங்கனியைப் பெற்றவனே, அந்தக் கனியைக் கையில் வைத்துள்ளவனே.

7. வணங்கும் அடியார்களுக்கான முக்திப் பொருளே

8. ஐந்து கரங்கள் கொண்ட யானை முகப் பெருமானே

இந்தப் பாடலில் விநாயகப் பெருமானின் இரண்டு லீலைகள் பாடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment