Sunday 29 October 2017

நிறைமதி முகமெனும் ஒளியாலே - சுவாமிமலை

ராகம்: ஹம்ஸாநந்தி
தாளம்: ஆதி (தகதிமி தகதிமி - அரை அடிதோறும் 2 முறை வரும் - 16 அக்ஷரம்)

தனதன தனதன ...... தனதான
   
நிறைமதி முகமெனு ...... மொளியாலே
 நெறிவிழி கணையெனு ...... நிகராலே

உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ
 உனதிரு வடியினி ...... யருள்வாயே

மறைபயி லரிதிரு ...... மருகோனே
 மருவல ரசுரர்கள் ...... குலகாலா

குறமகள் தனைமண ...... மருள்வோனே
 குருமலை மருவிய ...... பெருமாளே.

பொருள்:

நிறைமதி முகம் எனும் ஒளியாலே [நிறைமதி - பூரணச் சந்திரன்; ஒளி - பிரகாசம்]
 நெறி விழி கணை எனும் நிகராலே [ நெறி - முறைமை; கணை - அம்பு; நிகராலே - நிகரான]
உறவுகொள் மடவர்கள் உறவு ஆமோ? [ மடவர்கள் - மாதர்கள்]
 உனது இரு அடி இனி அருள்வாயே [அடி - திருவடிகள்]
மறை பயில் அரி திரு மருகோனே [அரி - விஷ்ணு; திரு - இலக்குமி]
 மருவலர் அசுரர்கள் குல காலா [மருவலர் - பகைவர்]
குறமகள் தனை மணம் அருள்வோனே
 குருமலை மருவிய பெருமாளே [குரு மலை = முருகன் குருவாக அமர்ந்த சுவாமிமலை]

முழு நிலவைப் போல ஒளிரும் முகமும்
 அம்பு போன்ற கண்களும் உடைய
உறவு கொள்ளும் மாதர்களோடு உறவு கொள்ளுதல் தகுமோ? தகாது.
 ஆதலால், உனது இரு தாள்களையும் அருள்வாயாக.
வேதங்கள் போற்றும் திருமால், திருமகள் இருவரின் மருமகனே!
 பகைவர்களான அசுரர்களின் குலத்தை அழித்தவனே (காலனாக அமைந்தவனே)
குறமகளை மணம்புரிந்து அருளியவனே!
 குருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

No comments:

Post a Comment