Sunday 29 October 2017

அபகார நிந்தை பட்டு உழலாதே - பழனி

ராகம்: சக்ரவாகம்
தாளம்: அங்க தாளம் (தகதகிட தகிடதக தகதகதிமி - 16 அக்ஷரம்)

தனதான தந்தனத் ...... தனதான

அபகார நிந்தைபட் ...... டுழலாதே
 அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே
 உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே
 இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
 திருவாவி னன்குடிப் ...... பெருமாளே

பொருள்:

அபகார நிந்தை பட்டு உழலாதே [அபகாரம் - தீமை செய்தல்]
 அறியாத வஞ்சரைக் குறியாதே [குறித்தல் - நினைத்தல்]
உபதேச மந்திரப் பொருளாலே
 உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
இபமாமுகன் தனக்கு இளையோனே
 இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெப மாலை தந்த சற்குருநாதா
 திருவாவினன்குடிப் பெருமாளே

பிறருக்குத் தீமைகள் செய்து அதனால் மற்றவர்கள் பழிக்கும் படி உழலாமல்
 நல்ல நெறிகளை அறியாத வஞ்சனை நிறைந்தவர்களை சற்றும் நினைக்காமல்
இறைவன் அருளிய உபதேச மந்திரங்களைச் சொல்லிச்சொல்லி
 அவனையே நினைத்து அவன் அருளைப் பெறுவேனோ?
ஆனை முகனுக்கு இளையவனே
 இமய மலை ராஜனின் புதல்வி, உத்தமி பார்வதியின் குழந்தையே!
ஜெபமாலையை அளித்த குருவே
 ஆவினன்குடி என்னும் பழனியில் வசிக்கும் இறைவனே!

பழனி மலையில் தான் முருகன், அருணகிரிநாதருக்கு ஒரு ஜெப மாலையை அளித்தார். அருணகிரிநாதர் பழநியைப் பற்றி சொல்லும் போது - அதிசயம் அனேகம் உற்ற பழனி மலை என்கிறார். அகத்தியருக்குத் தமிழ், அதன் இலக்கணம் ஆகியவற்றைக் கற்பித்தவர் - பழனி மலை முருகன். மாம்பழக் கவிராயர் என்னும் புலவர் கவி பாட அருளியவர் - பழனி மலையான். வள்ளி மலை சுவாமிகளுக்குத் திருப்புகழைக் காட்டியவர் பழனிமலையான். அவர் இல்லை என்றால் என்று திருப்புகழ் நமக்கு இல்லை. இவ்வாறு பல அதிசயங்கள் - மனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத பல அதிசயங்கள் அரங்கேறியது பழனி மலை.

No comments:

Post a Comment