Sunday 29 October 2017

திருமகள் உலாவும் - கதிர்காமம்

ராகம்: குந்தலவராளி
தாளம்: ஆதி

தனதனன தான தனதனன தான
..தனதனன தான தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி
..திருமருக நாமப் பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
..தெரிதரு குமாரப் பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
..மரகதம யூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
..மருவுகதிர் காமப் பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
..அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
..அமலர்குரு நாதப் பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
..இமையவர்கு லேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
..இருதனவி நோதப் பெருமாளே.

சூரசம்ஹாரம் நிறைவேற்றி இன்று தெய்வானையை மணம் செய்து கொள்கிறார் முருகப் பெருமான்.

பொருள்:

அருணகிரிநாதர் பல பாடல்களில் திருஞானசம்பந்தர், முருகப் பெருமானின் அவதாரம் என்பதை பறைசாற்றியுள்ளார். இந்தப் பாடலும் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

திருமகள் உலாவும் இரு புய முராரி
 திரு மருக நாமப் பெருமாள் காண்
[இலக்குமி தேவி தழுவும் இரு தோள்களைக் கொண்ட திருமாலின் மருகன் என்னும் பெயர் உடையவன் நீ]

செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
 தெரி தரு குமாரப் பெருமாள் காண்
[செக தலம் - செக - ஜகம்; தலம் - மண் - மண்ணுலகம்;]
மண்ணுலகும் விண்ணுலகும் போற்றும் பாடல்கள் பல புனைந்த சம்பந்தப் பெருமான் நீ

மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
 மரகத மயூரப் பெருமாள் காண்
[வணங்கும் அடியாரின் மனதில் நிறையும் மரகத மயில் மீது வரும் பெருமான் நீ]

மணிதரளம் வீசி அணி அருவி சூழ
 மருவு கதிர்காமப் பெருமாள் காண்
[மணிகளையும் முத்துக்களையும் வீசி வாரும் அழகிய அருவி சூழ்ந்த கதிர்காமத்தின் இறைவன் நீ]

அருவரைகள் நீறுபட அசுரர் மாள
 அமர் பொருத வீரப் பெருமாள் காண்
[பெரிய மலைகள் வீழ, அசுரர்கள் மடிய போர் புரிந்த வீரன் நீ]

அரவு பிறை வாரி விரவுசடை வேணி
 அமலர் குருநாதப் பெருமாள் காண்
[பாம்பு, சந்திரன், கங்கை (வாரி) இவை கலந்த சடையுடைய சுத்தமான பரமசிவனின் குருநாதன் நீ]

இருவினையிலாத தருவினை விடாத
 இமையவர் குலேசப் பெருமாள் காண்
[நல்வினை, தீவினை என்று எவ்வினையும் இல்லாதவர்களும், தருவின் (கற்பகவிருட்சம்) நிழலை விட்டு என்றும் அகலாதவர்களுமான தேவர்களின் குலத்தைக் காத்த தலைவன் நீ]

இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
 இருதன விநோதப் பெருமாளே.
[சிலை - வில்; வில்லேந்திய வேடர் குலத்தின் கொடிபோன்றவளான வள்ளியை அவளது கருணைப் பெருகும் பெருமார்போடு அணைப்பவனும் நீ] 

No comments:

Post a Comment