Sunday 29 October 2017

இருமலு ரோக முயலகன் வாத - திருத்தணி

ராகம்: அசாவேரி
தாளம்: விலோம சாபு (தகதிமி தகிட - அரை அடி தோறும் நான்கு முறை வரும் - 7 அக்ஷரம்)

தனதன தான தனதன தான
     தனதன தான ...... தனதான

இருமலு ரோக முயலகன் வாத
 மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
 யெழுகள மாலை ...... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
 பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
 படியுன தாள்கள் ...... அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி
 மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
 வடிசுடர் வேலை ...... விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
 தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
 தணிமலை மேவு ...... பெருமாளே.

பொருள்:

இப்பாடல் சகல ரோகங்களையும் விரட்ட வல்லது. தினமும் பாடினால், நோயே இல்லாத வாழ்வு நமக்கு முருகன் அருளால் கிட்டும்.

இருமலு ரோக, முயலகன், வாதம், எரிகுண நாசி, விடமே, நீரிழிவு
 [இருமல் ரோகம், முயலகன் என்னும் வலிப்பு, வாதம், எரிக்கின்ற மூக்கு நோய், விட நோய்கள், நீரிழிவு (இன்று பெரும்பாலும் காணப்படுவது!)
 
விடாத தலைவலி, சோகை, எழுகள மாலை இவையோடே
 [தலைவலி, இரத்த சோகை, கழுத்தைச் சுற்றி வரும் புண்கள்]

பெருவயிறு, ஈளை, எரி குலை, சூலை, பெருவலி, வெறும் உள நோய்கள்
 [பெருவயிறு (cyst, ulcer) முதலிய வயிற்று நோய்கள், நுரையீரல் நோய்கள், நெஞ்சு எரிச்சல், வயிற்றுவலி]
 
பிறவிகள் தோறும் எனை நலியாத படி,
 [ஒவ்வொரு பிறவிகளிலும் என்னைத் தாக்கக் கூடாது]

உன தாள்கள் அருள்வாயே
 [அதற்காக உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக]

வரும் ஒருகோடி அசுரர் பதாதி மடிய
 [எதிர்த்து வந்த கோடிக் கணக்கான அசுரர்களின் காலாட்படை வீரர்களை இறக்கச் செய்து]

அனேக இசைபாடி வரும் ஒரு காலபயிரவர் ஆட
 [பலவித இசைகளைப் பாடி வரும் ஒப்பற்ற கால பைரவரான சிவபெருமான் களத்தில் மகிழ்ந்து ஆட]

வடிசுடர் வேலை விடுவோனே
 [ஒளி மிகுந்த வேலை விடுவோனே]

தரு நிழல் மீதில் உறை முகிலூர்தி தரு திருமாதின் மணவாளா
 [கற்பகத் தருவின் நிழலில் அமரும், முகிலை [மேகத்தை] வாகனமாக கொண்ட இந்திரன் பெற்ற பெண்ணின் மணவாளா!]

சலமிடை பூ இன் நடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே
 [நீர் சூழ்ந்த உலகின் நடுவில் இருக்கும் பெருமை மிகு திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!] 

No comments:

Post a Comment