Sunday 29 October 2017

இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி - திருசெந்தூர்

ராகம்: உசேனி
தாளம்: அங்க தாளம் (தகதகிட தகிட தகதிமி தகதகதிமி - 18 அக்ஷரம்)

தனதனன தனன தந்தத் ...... தனதான
 
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
 இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
 உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
 வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே

கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
 கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே

பொருள்:

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
 இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே
உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி
 உன்னை எனது உள் அறியும் அன்பைத் தருவாயே
மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல்
 வனச குறமகளை வந்தித்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
 கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே

இயல் இசை ஆகியவற்றில் தேர்ந்த மங்கையர்களை* அடைந்து, அதனால் சோர்வடைந்து
 பகலிலும் இரவிலும் அவர்களையே நினைத்து, சம்சாரத்தில் உழலாமல்
உயர்வான கருணையைப் பொழியும் உனது அருட்கடலில் மூழ்கி
 உன்னை என் உள்ளத்தால் அறியும் அன்பினை அருள்வாய்
மயில்கள், ஆடுகள், வேடர்கள் சூழ்ந்த தினை வனத்தில் காவல் புரியும்
 திருமகளைப் போன்ற மலர்ந்த முகம் உடைய வள்ளியை முதலில் வணங்கி, அவளை மணந்தோனே!
கயிலை மலைக்கு நிகரான திருச்செந்தூர் என்னும் பதியில் உறையும் இறைவனே!
 யானைமுகனின் இளவலே! கந்தப் பெருமாளே!!

*இங்கு மங்கையர்கள் என்பதை, பெண்கள் மற்றும் பொன், பொருள், நிலம், மக்கள் என்னும் ஆசைகள் என்று வைத்துக்கொள்ளவும்.

பி.கு: பொதுவாக அருணகிரிநாதர், நோயுறுதல், விலை மாதுகளோடு உறவாடுதல், கீழ் மகனாக இருத்தல் என்று பெரும்பாலான பாடல்களில் வரும். அவரை முருகன் ஆட்கொண்டுவிட்டார். மேலும் முருகனின் புகழைப் பரப்புவதற்காக இப்பாடல்களைப் பாடினார். பின் ஏன் இவ்வாறு தன்னைச் சொல்லிக்கொள்கிறார் என்ற கேள்வி நம்மிடத்தே பிறக்கும்.

திரு கி.வ.ஜ அவர்கள் அழகாய் ஒன்று சொல்லியுள்ளார். அருணகிரிநாதர் ஒரு எழுத்தர் (scribe). ஒருவன் தவறு செய்தால், நீதி மன்றத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதித் தருபவர் அந்தக் குற்றவாளி எழுதுவது போல தான எழுதுவார். "நான் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன். மன்னித்துவிடுங்கள்" என்றெல்லாம் எழுதித் தருவார்.

அதே போல, நாம் செய்த பிழைக்காக இறைவனிடம் மன்னிக்குமாறு கோரிக்கை எழுதும் எழுத்தர் - அருணகிரிநாதர். நமக்கு வண்ணப் பாடல்களாக எழுத வராது. ஆதலால் நமக்காக அவர் எழுதி வைத்துள்ளார் அவர். நமது வேலை அவற்றைத் திரும்பித்திரும்பி இறைவன் முன் படிப்பது. பாடுவது.

1 comment:

  1. இதில்
    மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல்
    வனச குறமகளை வந்தித்து அணைவோனே இதன் அர்த்தம்
    வேண்டும் ஐயா.....
    ஜெ மூர்த்தி யாதவ்

    ReplyDelete