Sunday 29 October 2017

அகரமும் ஆகி - பழமுதிர்சோலை

ராகம்: சிந்துபைரவி
தாளம்: விலோம சாபு (தகதிமி தகிட - அரை அடி தோறும் நான்கு முறை வரும் - 7 அக்ஷரம்)

தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
 அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
 இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
 வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
 திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

பொருள்:

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
 [அகரம் - முதல்; முதன்மையானவன் ஆகி, அதிபன் - எல்லாவற்றிற்கும் தலைவனாகி, அதிகம் - யாவையும் கடந்தவனாகி, அகம் - அனைத்திற்குள்ளும் இருப்பவனாகி]

அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய்
 [பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகி, அவர்களுக்கும் மேலானவனாகி]

இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
 [இகரம் - இவ்வுலகில் உள்ள பொருட்களாகி, எங்கும் உள்ள பொருட்களும் ஆகி, இனிமை தரும் பொருளாக வருவோனே]

இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முனோடி வரவேணும்
 [இந்தப் பெரிய நிலம் மீது, எளியவன் வாழ, நீ என் முன் ஓடி வரவேண்டும்]

மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
 [மகபதி - யாகங்களின் அதிபதியான வலாரி - இந்திரன் (வலாசுரன் என்னும் அசுரனை அழித்தவன் - வலாரி) மகிழ்வடையச் செய்த அழகனே]

வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
 [வனத்தில் வாழும் வேடன் செய்த பூஜையால் மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்த கதிர்காம முருகனே]

* முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட
பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில்
பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம்
பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற
வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. [நன்றி: கௌமாரம் வலைதளம்]

செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடும் மயிலோனே
 [செககண சேகு தகுதிமி தோதி திமி என்ற ஜதியில் மயில் மீது ஆடிவரும் மயிலோனே]

திரு மலிவான பழமுதிர்சோலை மலைமிசை மேவு பெருமாளே
 [திரு - லக்ஷ்மி; மலிவான - நிறைந்த; லக்ஷ்மீகரமான (அழகான) பழமுதிர்சோலை மலையில் உலாவும் பெருமாளே]

இக்கந்தசஷ்டி நன்னாளில் முருகப் பெருமான் எல்லா வளமும் நலமும் நமக்கு அருளட்டும்.

முருகா சரணம்!

வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!

No comments:

Post a Comment