Thursday 19 October 2017

சந்ததம் பந்தத் தொடராலே - திருப்பரங்குன்றம்

ராகம்: ஹிந்தோளம்
தாளம்: அங்க தாளம் (தகதகிட தகதிமி தகதகதிமி 15 அக்ஷரம்)

தந்தனந் தந்தத் ...... தனதான

சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே

பொருள்:

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
கந்தன் என்று என்று உற்று உனை நாளும்
கண்டு கொண்டு அன்புற்று இடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கில் சிவை பாலா
செந்தில் அம் கண்டிக் கதிர்வேலா
தென்பரங்குன்றில் பெருமாளே

தினமும் பந்தப் பாசத் தொடர்களினால்
பல மனக்குழப்பங்களுக்கு ஆளாகி, சோர்ந்து திரியாமல்'
கந்தன் கந்தன் என்று மனதால் உன்னைத் தினமும் பாடி
என் மனக்கண்ணில் உன்னைக் கண்டு அன்பு கொள்ள மாட்டேனா?
தந்தி - யானை. ஐராவதம் என்னும் யானை, பாதுகாத்து அன்புடன் வளர்த்தவளும், கொடி போன்றவளுமான தெய்வானையை மணம் செய்துகொண்டு சேர்ந்தவனே!
சிவபெருமானின் பக்கத்தில் வீற்றிருப்பவளாம் பார்வதி, அவளது மகனே!
திருச்செந்தூர், அழகிய கண்டி (இலங்கையில் உள்ளது) ஆகியவற்றில் வீற்றிருக்கும் ஒளிவீசும் வேல் உடையவனே
திருப்பரங்குன்றைத் தன் ஒரு படை வீடாக வைத்துக்கொண்ட பெருமானே!

No comments:

Post a Comment